Monday, April 28, 2014

தமிழாய்வுப் புலத்தில் ‘கெட்டுக்கிடை’ 07 ஏப் அசின் சார், கழுகுமலை.



‘மேலும்’சிவசு அவர்கள்
லம் விசாரித்துக் கொள்வதற்காக ஓரிரு வாரங்களுக்கு முன் பேரா.சிவசு அவர்களை அலைபேசியில் அழைத்தேன். தொடர்பு கொள்ளும் போதெல்லாம், அவர் முந்திக்கொண்டு என் வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கேட்டு நலம் விசாரித்துக் கொள்ளும் நற்தகைமையாளர். மகிழ்ச்சியுடன் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
“அண்மையில் ‘மேலும்’ நிகழ்வேதும் காணோமே?” என்றேன். புது உற்சாகம் கொண்டவராய், “அதற்கான ஏற்பாட்டில் தான் இருக்கிறேன். வழக்கத்தைவிட இந்த முறை சற்று வித்தியாசமான களமாக அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்றார்.
எப்படி? யென்று நான் கேட்டதும் தொடர்ந்தார். “கல்லூரிகளில் உள்ள ஆய்வு மாணவர்களுக்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் புது முயற்சி. இதன் வழியாக, அவர்களின் ஆய்வு குறித்த புதிய பார்வைகளையும், ஆலோசனைகளையும், ஐய விளக்கங்களையும் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை” என்றார். “இது கல்லூரியோ அல்லது பல்கலையோ எடுத்து நடத்த வேண்டிய விஷயமாச்சே?” என்றேன். அதற்கு அவரோ, “உண்மைதான். இருந்தாலும், நாம் வெளியிலிருந்து நடத்தும்போது இன்னும் கொஞ்சம் சுதந்திரமாகச் செயல்பட முடியும்” என்றார். பங்கேற்பாளர்கள் குறித்துக் கேட்ட போது, “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகளில் ஆய்வு செய்யும் மாணவர்கள் எண்பது பேரும்; தமிழார்வலர்கள் இருபது பேருமாக மொத்தம் நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள ஏற்பாடு. நிகழ்ச்சி அமைப்பை நெல்லை தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் கவனித்துக் கொள்கிறது. விரைவில் இதற்கான அழைப்பிதழ் வரும். தவறாமல் வந்து விடுங்கள்” என்றார்.
நிகழ்ச்சி நிரலோடு அழைப்பிதழ் வந்தது. சென்றிருந்தேன்.
நிகழ்வு: 29.03.2014 சனிக்கிழமை; காலை 10 மணிக்குத் தொடங்கியது.
நோக்க உரையில் பேரா.சிவசு அவர்கள், “ஆய்வுகள் சில நேரம் அப்படியே நின்று விடுகின்றன. படைப்பு அல்லது எழுத்திற்கும் இதுதான் நிலைமையாக உள்ளது. இந்த நிலையில் ‘மேலும்’ இதழ் அமைப்பியல் நிலைப்பாட்டை முன் நிறுத்தியது. தமிழவன் எழுதிய ‘ஸ்டக்சுரலிசம்’ என்னும் அமைப்பியல் நூல், தமிழ் இலக்கியங்களைப் புதிய முறையில் ஆய்வு மேற் கொள்ள வைத்தது. சான்றாக, ஆண்டாள் திருப்பாவையைக் கூட இவ்வாய்வு முறைக்கு உட்படுத்தப்பட்டது. இது போல குறியீட்டியல் முறையும் பின்பற்றப்பட்டது. இவ்விரு உத்திகளுடன் ஆய்வுப் புலத்திற்குள் நுழைந்தால் புதிய புதிய முறைகளைச் சொல்ல முடியும்.
மலையாளம், கன்னடம் சார்ந்தவர்கள், தம் சொந்தத் தாய் மொழியில் என்னென்ன இலக்கியங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருக்கிறார்கள். ஆனால், இங்கு அப்படியில்லை. இன்னும் சொல்லப் போனால், கல்விப் புலத்தில் உள்ளவர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் பொருட்டே தமிழவன் ‘சிற்றேடு’ இதழை நடத்தி வருகிறார். இவ்விதழில், நவீன உத்திகளுடன் கூடிய ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன. படியுங்கள், நீங்களும் எழுதுங்கள். இன்றைய ஆய்வு மாணவர்களாகிய உங்களுக்குப் புதிய ஆய்வு உத்திகளை எடுத்துச் சொல்ல நினைத்ததன் விளைவே இந்தப் பயிற்சிப் பட்டறை” என்றார்.
பேரா.கட்டளை கைலாசம்
வரவேற்புரை ஆற்ற வந்த பேரா.கட்டளை கைலாசம் அவர்கள், “இன்றைய ஆய்வுகள் தேக்கநிலை அடைந்து விட்டது என்பதற்கு சிவசு அவர்கள், ‘கெட்டுக்கிடை’ ஆகிவிட்டது என்ற சொல்லை அழைப்பிதழில் பயன்படுத்தியிருந்தார். ‘கெட்டுக்கிடை’ என்பது தேக்கம் மட்டுமல்ல; துர்நாற்றமும் சேர்ந்தது. இந்தக் கெட்டுக்கிடையை எப்படி சரி செய்வது? என்பதைத்தான் இன்றைய பயிற்சி நமக்கு எடுத்துக் கூற இருக்கிறது” என்றுரைத்தார்.
“ஆய்வுக் களங்களில் தேக்கம்” என்ற தலைப்பில் பேச வந்த பேரா.சிவசு அவர்கள், “தமிழ்க் கல்விப் புலத்தில் முதன்முதலாக முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் டாக்டர் மு.வ. அவர்கள். பெரும்பாலும் ஆங்கிலப் படைப்புகளும் விமர்சனங்களும் இங்கே நுழையத் தொடங்கிய நேரம் அது. 1917-க்குப் பின், பொதுவுடைமை பிரச்சினை எழுந்த போது மார்க்சியப் பார்வை தோன்றியது. பின்பு, பிராய்டும் ஆய்வுக் களத்தில் வந்தார்.
தொல்காப்பியமும் நன்னூலும் ஆய்வாளர்களால் சரியான பார்வையில் பார்க்கப்பட வில்லை. இதனிடையே, பெண்ணியம், தலித்தியம் தொடர்பான பார்வைகளும் ஆய்வில் நுழைந்தன. ஆய்வு நெறிகளை எங்கிருந்து பெற வேண்டுமென நினைத்தோமோ, அங்கிருந்து பெறவில்லை. தொல்காப்பியம் காட்டும் எழுத்து, சொல், பொருள் வெறும் தேர்வுக் கண்ணோட்டத்துடனே போய் விட்டது. இதனால், பொருளிலிருந்து ஆய்வுத் தலைப்புகள் எடுக்கப்படவில்லை. இந்த ஆதங்கம் எங்களிடையே இன்றும் உள்ளது. தொல்காப்பியமும் நன்னூலும் மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.
கணிதத்தில், Permutation Component போல, நம் ஆய்வுகளின் மூலம் புதிய பல பெருக்கங்களைக் காண வேண்டும். Evaluvation Theory  என்னும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, புதிதாக ஏதும் தோன்ற முடியாது என்கிறது. “ஒன்றிலிருந்து ஒன்று” – இப்படித்தான் உருவாகியிருக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. சான்றாக, புறநானூற்றில் உள்ள ஆற்றுப்படைப் பாடல்கள் பத்து அடிகளுக்குள் உள்ளவை. இவை பதிற்றுப்பத்தில் இருபது அடிகளுக்கு விரிவடைந்து, பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படைகள் இருநூற்று ஐம்பது அடிகளுக்கு நீட்சி பெறுகின்றன. புதிய உத்திகளுடன் வடிவமும் மாறி வந்துள்ளன. அகத்திணையும் புறத்திணையும் மயங்கி வருகின்றன. இந்த நீட்சிக்காக முதற்பொருளும் கருப்பொருளும் விரிவாக்கம் பெறுகின்றன. இப்படி மாற்றங்கள் அன்றே நிகழ்ந்து வந்த போதிலும், இன்று ஆய்வாளர்களின் ஆய்வுத் தலைப்புகளிலேயே தேக்க நிலை நிலவுகிறது.
இச்சூழலில், நவீன உத்திகளைப் பயன்படுத்தி புதுப்புது தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆய்வு மாணவர்கள் தேர்வுக் கண்ணோட்டத்தைத் தவிர்த்து, திறனாய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்றார்.
பேரா.தமிழவன் அவர்கள், “இலக்கணிகளும் புதிய கோட்பாடுகளும்”என்ற தலைப்பில் உரையாற்ற வந்தார். அப்போது, “உங்க எல்லாத்துக்குமே தமிழ் படிக்க ஆர்வமில்ல; டிகிரி வாங்க மட்டுமே ஆர்வமா இருக்கீங்க. (முன்னால் இருந்த ஆய்வு மாணவர்களைப் பார்த்து, தி.க.சி.-யைத் தெரியுமா? என்று வினவினார். பலரும் தெரியாது என்று சொல்ல) தமிழ் எழுத்தாளர்களைத் தெரிஞ்சுக்காத தமிழ் எம்.ஏ., எம்.பிஎல்., பி.எச்டி., எதுக்கு? வார்த்தை மாறாம எழுதுறதுக்கு மார்க் கிடைக்குது. நம்மளக் கொஞ்சமும் யோசிக்க வைக்கிறதில்ல. எழுத்து, சொல் சூத்திரங்களை ரிபீட் பண்றீங்க. சிந்திக்க வைக்கனும், பண்றதில்ல.
பேரா.தமிழவன் அவர்கள் காமராஜர் காலத்துல நூறு பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினா ஆறு பேருதான் பாஸ் ஆவாங்க. ஆனா, இன்னைக்கு? இந்த சமூகத்த மாத்தவே முடியாது. நாம பண்றது எல்லாமே சடங்காகி விட்டது. இங்கு படிப்பும் ஒரு சடங்காகவே இருக்கிறது. ரிபீட் பண்றது நம்முடைய நோயாகி விட்டது. அரசியல் மேடைகளில் பாரதிதாசன் பாடல்களை உணர்ச்சிப் பெருக்கோடு ஒப்பிக்கும் போதும்; பட்டிமன்றத்தில் சினிமாப் பாடல் வரிகளை இடைவிடாமல் பாடும்போதும் கை தட்டுகிற இனம் – தமிழினம்! எனக்குள்ள நெறைய கோபம். கொஞ்சம் கொட்டிக்கிட்டேன். அவ்வளவுதான்.
சரி, உன் கற்றல எங்க ஆரம்பிக்கிறது? உன் குடும்பத்திலிருந்து, சமயத்திலிருந்து எங்கும் ஆரம்பிக்கலாம். ஆனா, யோசிக்கிறதில்ல. தமிழ் சமூகத்தில் ஏதோ கோளாறு இருக்கு. இன்றைய மாணவர்களுக்குத் தற்கால பிரக்ஞை, உணர்வு வேணும். அடுத்த வேலை உணவு, அரசியல், கல்வி எல்லாம் எப்படிப் போயிட்டு இருக்குன்னு ஒவ்வொன்னா யோசிக்கணும். இதத்தான் நாம இப்பப் பேசணும். ஆய்வு செய்யக் கூடிய மாணவர்கள் தலைப்புகளைக் கூட அவர்களே தேர்வு செய்வதில்ல. அப்படித் தேர்வு செய்யும் தலைப்புகளும் பொருத்தமானதா இல்ல. எம்.பிஎல்., தலைப்ப பி.எச்டி.,க்கும்; பி.எச்டி., தலைப்ப எம்.பிஎல்.,க்குமா எடுத்திருதாங்க. இன்னும், சிலர் ஜனரஞ்சகமான பதிப்பக நூல்களையும், சினிமாப் பாடல்களையும், சுஜாதா நாவல்களையும் ஆய்வு செய்றாங்க. சுஜாதா எழுதின ஓரிரு நாவல் தவிர மத்ததெல்லாம் நாவலில்லனு அவரே ஏத்துக்கிட்டார். எட்டு ஞானபீட பரிசு பெற்ற கன்னட மொழியில், சினிமாக்காரர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்ல. இங்குதான் அவ்வளவு அந்தஸ்தும். சரி, தலைப்புக்கு வருகிறேன்.
என்கிட்ட A, B -ன்னு ரெண்டு பேர் ஆய்வு மாணவர்களா வர்றாங்க. அவங்ககிட்ட சுந்தர ராமசாமி எழுதின ‘புளியமரத்தின் கதை’ நாவலைக் கொடுத்து படிச்சிட்டு வரச் சொல்றேன். அவங்களும் படிச்சிட்டு வர்றாங்க. A புத்திசாலி மாணவரா இருக்கார். நான் எதிர் பார்க்கிற மாதிரி படிச்சிட்டு வர்றார். நாவலோட பெயரிலேயே ஒரு தத்துவம் இருக்குங்கிறார். B கிட்ட கேட்டேன். அவர் படிச்சேன்கிறார். தலைப்பு பத்தி நான் கேக்குறேன். அப்படி ஏதும் பாக்கல, கதை நோக்குல படிச்சேன்கிறார். அவரிட்ட, மறுபடியும் படிச்சுப்பாத்து சொல்லுங்கன்னு அனுப்பிடுறேன்.
ஆய்வு மாணவர்கள்
A மாணவர் கிட்ட, சுந்தர ராமசாமி எழுதின ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலைக் கொடுத்து படிச்சிட்டு வரச் சொல்லுதேன். அதையும் அவர் படிச்சிட்டு வர்றார். உடனே, சுந்தர ராமசாமி எழுதின சிறுகதைகள், கட்டுரைகள் எல்லாத்தையும் படிச்சிட்டு வரச் சொல்லுதேன். எல்லாத்தையும் படிச்சிட்டு வர்றார். அவருகிட்ட, புளியமரத்தின் கதைய, சுந்தர ராமசாமியின் பிற படைப்புகளோட ஒப்பீடு செய்யச் சொல்லுதேன். அதையும் அவர் செய்து வந்து சொல்றார். சுந்தர ராமசாமியின் கருத்துலகத்தில் ‘புளியமரத்தின் கதை’ எங்க நிக்குதுன்னு கேக்குறேன். அழகா பதில் சொல்றார்.
A மாணவர், சுந்தர ராமசாமி முழுமையும் படிச்சு முடிச்ச நிலையில; இப்ப அவருகிட்ட, க.நா.சு.-வ படிச்சிட்டு வாங்கனு சொல்றேன். அதப் படிச்சிட்டு வந்தவர், ‘க.நா.சு. போல இருக்கு சுந்தர ராமசாமி’னு சொல்றார். அந்த A மாணவர், உண்மையைக் கண்டுகொள்கிறார். இப்படி அறிவைத் தேடுவதுதான், உயர்கல்வியின் நோக்கம். ஆய்வு மாணவர்கள் இப்படித்தான் உருவாக வேண்டும்.
இதிலிருந்து தரம், தரமில்லாதது எது என்பதைக் கண்டுக்கோங்க. இலக்கியம் வேறு, இலக்கணம் வேறு என்பதில்ல. தொல்காப்பியர் எங்க கட்சிக்காரர். அவர் வேற பக்கம் இருந்திருந்தா பொருளதிகாரம் எழுதியிருக்க மாட்டார்” என்றார்.
“இலக்கியமும் புதிய முறையியலும்” என்ற தலைப்பில், பேரா.துரை சீனிச்சாமி அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “மொழிக்குரிய இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்குரிய இலக்கணத்திற்கும் வேறுபாடு உள்ளது. தமிழில் இலக்கணம் என்பது பண்பாடு சார்ந்தது. ‘தமிழ் வாழ்க’ என்று உணர்ச்சிப் பெருக்கோடுதான் தமிழை அணுகுகிறோமே தவிர, அதன் தொன்மை குறித்த அறிவுப் பூர்வமான தேடல் நம்மிடையே இல்லை. தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி என்ற சொற்பயன்பாடு கிடையாது. கிழவன், கிழத்தி என்ற பதங்களே பயன்படுத்தப் பட்டுள்ளன. அப்படியானால் இப்பத மாற்றம் எப்போது நிகழ்ந்தது? பழந்தமிழரின் இன வரலாறே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும். இவற்றைப் படிக்காமல் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
பேரா.துரை சீனிச்சாமி
மொழியை வைத்துக் கொண்டு வியாபாரம், அரசியல் செய்வது இங்குதான் நடக்கிறது. கொஞ்சம் கூட சொரணையில்லை. இலக்கியம் என்பது கிரியேட்டிவிட்டியும்; கிரியேட்டிவிட்டி பற்றிய அறிவும். இன்று இரண்டும் இல்லை. சாதீயமும் மதவாதமும் சேர்ந்த வைதீகம், நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மை ஆட்சி செய்கிறது.
இச்சூழலில், நூல்களைப் படிக்காமல் எப்படி ஆய்வு செய்வது? குதிரைக்கு கடிவாளம் கட்டியது போன்ற ஆய்வுகளால் என்ன பயன்? இன்றைய மாணவர்களுக்கு நான் சொல்வது, வாசிப்பு அவசியம். படிக்கும் போதே குறிப்பெடுத்துப் படியுங்கள். படித்துப் படித்து உங்கள் அறிவைக் கூர்மைப் படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். இந்த உரைகளுடன் முற்பகல் நிகழ்வுகள் நிறைவுற்றன.
பிற்பகலில்:
மதிய உணவுக்குப் பின், ஆய்வாளர்கள் அனைவரும் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இக்கால இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் என்ற பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனிக் குழுவாக அமர்ந்தனர். அப்பிரிவுகளுக்கு ஏற்ப தனித் திறனுடைய பேராசிரியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அக்குழுக்களில் அமர்ந்தனர். ஆய்வு மாணவர்கள் தயக்கமின்றி தங்களுடைய ஐயங்களை அவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
பேரா.தமிழவன் அவர்கள்
இன்றைய நிகழ்வில்:
கூட்டத் தொடக்கத்தில், மறைந்த மூத்த எழுத்தாளர் தி.க.சி. அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பேரா.சிவசு அவர்களின், “இலக்கியத்தைப் புதிதாய் எழுதுவது எப்படி?” என்னும் நூல் வெளியிடப்பட்டது. அது, தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’ நாவல் பற்றிய பதினோரு விமர்சனக் கட்டுரைகளைக் கொண்டதாய் இருந்தது.
பொதுவாக, இம்மாதிரிக் கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் இறுதிவரைப் பார்வையாளர்களாகவே இருந்துவிட்டுப் போவதுண்டு. ஆனால், இந்நிகழ்வின் பிற்பாதி, ஆய்வு மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்களின் ஆய்வு குறித்த சந்தேகங்களையும், தொடர்புடைய பார்வை நூல்கள் குறித்தும் கேட்டுக் கேட்டு குறிப்பெடுத்த வண்ணம் இருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. ஆய்வு மாணவர்களுடன்
ஒரு மருத்துவ முகாம், சுய தொழிலுக்கு வங்கிக்கடன் மேளா போன்றவற்றில் பயனாளி நேரடிப் பயன் பெறுவதைப் போல, இங்கு ஆய்வு மாணவர்களும் நேரடிப் பயன் அடைந்ததைக் காண முடிந்தது.
* * *
 

பாளையில் “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் தி.க.சி நினைவுப் பகிர்தல் கருத்தரங்கு




பாளையில் “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் தி.க.சி நினைவுப் பகிர்தல் நிகழ்ச்சி பாளை.சைவசபையில் 27.4.14 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

பேராசிரியர் “மேலும்”சிவசு நிகழ்ச்சிக்குத் தலைமையுரை ஆற்றினார்.

சௌந்தரமகாதேவன் வரவேற்றுப் பேசினார்

.’’தி.க.சியும் தமிழ்த்திறனாய்வும்”எனும் தலைப்பில் முனைவர் வே.கட்டளை கைலாசமும்,’’பேரன்பாளர் தி.க.சி”எனும் தலைப்பில் ஓவியர் வள்ளிநாயகமும்,”ஆய்வாளர் நோக்கில் தி.க.சி”எனும் தலைப்பில் முனைவர் ச.மகாதேவனும்,”தி.க.சியும் சிற்றிதழ்களும்”எனும் தலைப்பில் பேராசிரியர் சிவசுவும் சிறப்புரையாற்றினர்

 “தி.க.சி.என்கிற சாகித்திய அகாடெமி விருது பெற்ற படைப்பாளர் வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகினார்.தமிழகத்தின் இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் அவரால் அடையாளம் காணப்பட்டவர்கள்.1952 ஆம் ஆண்டு முதல் நெல்லையில் பதிப்பகம் நடத்தி பத்து ஆண்டுகள் உலகஇலக்கியங்களை திருநெல்வேலி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.ஜீவாவுடன் வல்லிக்கண்ணனுடன் ,தொமுசி உடன் வெகு நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.”என்று சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் சிறப்புரையாற்றினார்.
 
“தி.க.சி. புதுமைப்பித்தன் மீது கொண்டிருந்த அன்பு அளவிடற்கரியது,ஆனால் அவருக்கு வீரவணக்கம் செய்யாதீர் என்று எழுதியதன் காரணம் புரியவில்லை.தி.க.சி.ஒரு மிதக்கும் குறியாகத் திகழ்ந்தார்.தமிழியம்,தலித்தியம்,பெண்ணியம்,சூழலியம், ஆகியவற்றோடு அவர் தமிழ்த்தேசியமும் பேசினார்,ஈழப்பிரச்சினை அவரை வெகுவாகப் பாதித்தது.வெகு தீவிரமாக எதிர்வினை ஆற்றினார்.தாமரை இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபோது பலஎழுத்தாளர்களை அவர் உருவாக்கினார்,ஆனால் ஒரு காலகட்டத்தில் தாமரை இதழில் இருந்து விலகினாரா?அல்லது விலக்கப்பட்டாரா? என்ற கேள்வி இன்று வரைப் புதிராவே உள்ளது.தன் மகன் வண்ணதாசன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக இருந்தபோதும் அவரது படைப்புலகம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்?என்ற பல கேள்விகள் காலத்தின் முன் நிற்கின்றன..ஆனால் பதில் சொல்வதற்கு இன்று அவர் உயிருடன் இல்லை”என்று பேராசிரியர் சிவசு சிறப்புரையாற்றினார். 
 

.”தொடக்கத்தில் தி.க.சி.யின் பஞ்சசீலக்கொள்கை என்று ஒன்று இல்லை,இலங்கைப் படுகொலைக்குப் பின் அவர் தமிழ்த்தேசியம் என்ற ஒன்றைத் தன் பஞ்சசீலக் கொள்கையில் இடம்தந்து இறுதிவரைத் தீவிரமாய் போராடினார்.” என்று ம.தி.தா.இந்துக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வே.கட்டளை கைலாசம் சிறப்புரையாற்றினார்.

முன்னதாக முனைவர் பட்ட ஆய்வாளர் ரமேஷ் கிராமிய இசை வழங்கினார்.தேசியப் பாவலர் த.மு.சா.காஜாமைதீன் இரங்கல் கவிதை வாசித்தார்.விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் பேராசிரியர் அ.ராமசாமி,முனைவர் மாணிக்கம்,எழுத்தாளர் க்ருஷி,ஆகியோர் பங்கேற்றனர்.







படத்தில்: பாளையில் “மேலும்” இலக்கிய அமைப்பின் சார்பில் தி.க.சி நினைவுப் பகிர்தல் கருத்தரங்கில் பேராசிரியர் சிவசு பேசுகிறார்.அருகில் முனைவர் ச.மகாதேவன்,பேராசிரியர் கட்டளை கைலாசம் ஆகியோர்.
செய்தி..முனைவர்.ச.மகாதேவன்





Sunday, March 30, 2014

"மேலும்"புதினப் பட்டறை:பொதிகை அடிவாரத்தில் ‘முஸல்பனி’

25 ஓக
அசின் சார், கழுகுமலை.
முஸல் பனி
வந்த பார்சலைப் பிரித்தேன். உள்ளே அழைப்பிதழ், ஒரு நாவல் மற்றும் நான்கு பக்கக் குறிப்புரை இருந்தன. நெல்லை பேரா.சிவசு அவர்கள் அனுப்பியிருந்தார். முன்னதாகவே அலைபேசியில் விபரங்களைத் தெரிவித்திருந்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஆகஸ்ட் 18, 2013 ஞாயிறன்று நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை. வருவதற்கு முன் இந்நாவலைப் படித்து வர வேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை.
நாவல்: தமிழவன் எழுதிய ‘முஸல்பனி’
முதல் பதிப்பு: 2012
வெளியீடு: அடையாளம் (04332 – 273444)
தமிழகம் முழுவதும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ நடைபெறும் நாள். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு போல ஆறரை லட்சம் பேர் எழுதுவதாக செய்தித்தாளில் படித்த ஞாபகம். பேருந்தில் பெருங்கூட்டமாக இருக்குமே என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பேராசிரியரிடமிருந்து அலைபேசி அழைப்பு.
“நெல்லை வந்திடுங்க; நம்ம காரிலேயே போயிடலாம்” என்றார்.
மனம் தந்தி அடித்ததோ? என்னுள் எழுந்த வியப்போடு “சரி” என்றேன்.
நிகழ்வன்று அதிகாலையிலேயே கிளம்பி பேராசிரியர் சொன்னபடி நெல்லையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரின் வர்சா கார் வந்தது. காரில் பேராசிரியருடன் விமர்சகர் ஜமாலன், ஆந்திர திருநாவுக்கரசு, கவிஞர் நிதாஎழிலரசி. இவர்களுடன் நானும். ஒன்பது மணிக்கு அம்பையில் காலை உணவை முடித்து விட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம்.
தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மட்டுமின்றி பிறதுறைப் பேராசிரியர்களும் ஆர்வத்துடன் அவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தனர். தமிழ் வளர்த்த பொதிகையைப் படித்ததுண்டு. அப்போதுதான் நேரில் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் பெயர் பதிவு தொடங்கியது. பங்கேற்பாளர்களாக தென் தமிழகப் பல்கலைக் கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் படைப்பாளிளும் இலக்கிய ஆர்வலர்களும் வந்திருந்தனர்.
நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை
பத்து மணிக்கு தொடக்க விழா அரங்கேறியது. வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் சி. அழகப்பன் தலைமையுரை ஆற்றினார். “வாசிப்புப் பழக்கம் இன்றைய மாணவர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சற்று முன் இங்குள்ள சில மாணவிகளிடம் நீங்கள் படித்த ஏதாவது ஒரு நாவலைக் கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு யாரும் பதில் சொல்ல வில்லை. ஒரு மாணவி மட்டும் முல்லா கதைகள் படித்ததாகக் கூறினார். இது தான் இன்றைய இளையோரின் வாசிப்பு நிலை. இந்நிலை மாற உங்கள் வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதுதான் அறிவைப் பெருக்கும். மேலும், நம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டத்தான் இம்மாதிரிப் பயிற்சிப் பட்டறைகள். இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
பேரா.சிவசு அவர்கள் பயிற்சிப் பட்டறையை நடத்த வந்தார். பங்கேற்பாளர்களுக்கும் கருத்துரையாளர்களுக்குமான இடைவெளியை அகற்ற மேடையை விட்டு கீழே இறங்கி, அனைவரும் ஒரே தளத்தில் ஒரு முகமாய் பார்த்துப் பேசும் வகையில் வட்ட வடிவ அமர்வாக மாற்றியமைத்தார். சுய அறிமுகத்தோடு பட்டறை தொடங்கியது.
நாவல் வாசிப்பு பயிற்சிப் பட்டறை
‘முஸல்பனி’ என்ற தலைப்பு எதைக் காட்டுகிறது? என்று பேரா.சிவசு கேட்டார். அரங்கம் அமைதியானது. ஒருவர், “அது இளவரசியின் பெயர்” என்றார். பேராசிரியரோ, “முஸல் என்பது முயல். முயல் முல்லை நில விலங்கு. பனி பாலைக் குரியது. இந்தத் தலைப்பில் Space and Time இருக்கிறது. அதாவது இடமும் காலமும் தெரிகின்றன. இந்நூல் அவை சார்ந்தவையா என்று நாம் கவனிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து நாவலின் முதல் அத்தியாயம் வாசிக்கப் பட்டது. புரிதலைப் பகிரும் படிக் கேட்டுக் கொண்ட போது, பலரும் புரியவில்லை என்றே கூறினர். ஒருவர் ராம கதையுடன் ஒத்துப் போவதாகவும், இன்னொருவர் பக்தி இலக்கியத்துடன் ஒத்துப் போவதாகவும் கூறினர். இப்படி கூறப்பட்ட கருத்துக்களும் வெவ்வேறானவையாக இருந்தன. இன்னும் அநேகர் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தீராநதி விமர்சகர் ஜமாலன் எழுந்து, “மல்டி மீடியா வந்த பின்பு அனைவரும் கேட்பதையும் பார்ப்பதையுமே விரும்புகின்றனர். அத்தொழில் நுட்பம் எளிதாகச் சென்றடைவதால் புத்தகம் எடுப்பதைத் தவிர்க்கின்றனர். வாசிப்பு என்பது ஒரு கலை. நாவல் வாசிப்பிலிருந்து நம் வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். புத்தகம் வாங்குவது செயல் அல்ல; அது முதலீடு. இன்று எதிலும் துரிதம், துரிதம், துரிதம்! படிப்பதிலும் துரிதமாகப் படித்து துரிதமாகச் சலிப்படைந்து விடுகிறார்கள். மறைமுக அறிவு என்பதே இல்லை. அது நம்மை நிதானமாக வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. Reader and text என்பது மாறி இன்று Writer and text என்ற நிலை வந்துள்ளது. அந்த வகையிலே இந்த நாவல் படிமங்களையும், புது உத்திகளையும் கொண்டிருப்பதை நாவலாசிரியர் முன்னுரையிலேயே தெரிவிக்கிறார். இது நம்மை நிதான வாசிப்பிற்கு அழைத்துச் செல்கிறது.
தீராநதி விமர்சகர் ஜமாலன்
இப்போது வாசித்த பகுதியில் வருகிற அத்திரிகப்பா என்ற பெயர் ஓர் அர்த்தமற்ற சொல். தமிழக நாட்டுப்புறக் கதையொன்றில், அத்திரிப்பாச்சா என்ற அர்த்தமற்ற சொல்லை கொளக்கட்டை என்று நினைத்து மனைவியைத் துன்புறுத்திய ஒரு கணவனின் கதை உண்டு. அதைப் போலவே அர்த்தமற்ற ஒரு சொல்லாக அத்திரிகப்பா பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், அதையே அடுத்தடுத்த இயல்களில் படிக்கும் போது அத்திரிகப்பா சொல், பயனற்ற இக்கால அரசியல்வாதியைக் குறிக்கலாம். தமிழவன் எழுதிய, ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ முதலான ஐந்து நாவல்களும் அந்தந்த பத்தாண்டுகளில் உள்ள பிரச்சினைகளை உள்வாங்கி எழுந்தவையாகவே இருக்கின்றன” என்றார்.
சிவசு அவர்கள், “வாசிப்பு முறை எவ்வாறு காலந்தோறும் மாறுபடுகிறதோ அதற்கேற்ப, இன்று நாம் எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். காப்பியங்கள் படித்துக் கொண்டிருந்த நாம் ஆற்றுப்படை போன்ற நூல்கள் எழும்போது, அதற்கேற்ப நம் வாசிப்பு முறையை மாற்றிக் கொண்டோம். அதுபோல இன்று வழக்கமான நூல்களையும், பாடத்திட்ட நூல்களையும் தாண்டி புதிய சூழலுக்கு வந்துள்ளோம். மேலும், வெளிப்படையாக எழுதப்படும் படைப்புகள் எப்போதும் ஒரு பொருளைத் தருவன. அவை ஒரு காலத்தை மட்டுமே நிர்ணயித்துப் பேசுவன. ஆனால், இது போன்ற படைப்புகள் நம்மை வெவ்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றன” என்றார்.
பெங்களூர் ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால், பிற்பகல் இறுதி அமர்வில் வந்து சேர்ந்தார் தமிழவன். பகலில் பல்வேறு வினாக்களை எழுப்பியவர்கள் அவற்றை தமிழவன் முன்னிலையில் கேட்டார்கள்.
பேரா. ரவிக்குமார்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேரா. ரவிக்குமார் அவர்கள், “நாடு தழுவிய ஒரு பிரச்சினை இருக்கும் போது அப்பிரச்சினை குறித்துப் பேச, எழுத தடை இருக்கலாம். அச்சூழலில் பூடகமாக அவ்விசயத்தைக் கூற வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கும். ஆனால், அப்படியொரு நிலை இல்லாத இக்கால கட்டத்தில் ஏன் இப்படியொரு நாவல் எழுத வேண்டும்” என்றவர் தொடர்ந்து, “எந்த ஒரு படைப்பிலக்கிய மாகட்டும். சாதாரணமாக, ஒரு திரை இசைப் பாடலாக இருந்தாலும் சரி; அதிலுள்ள இசையாக இருந்தாலும் சரி. அதில் எல்லாவற்றையும் இணைக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கும். அப்படி ஏதும் இதில் இல்லையே ஏன்?” என்றும் கேட்டார்.
கல்லூரி மாணவி ஒருவர், “நாவலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் தனித்தனித் தலைப்புகளாக உள்ளன. ஒரு தலைப்பிற்கும் அடுத்த தலைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்கும் போது இதை நாவல் என்பதை விட சிறுகதைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்.
தமிழவன்
இறுதியாகத் தமிழவன் அவர்கள், பின்வரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கர்நாடக அரசு இலக்கியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமான பணத்தை செலவிடுகிறது. அதுபோல கேரளாவில் எழுத்து எவ்வளவோ மாற்றங்களை அடைந்து வருகிறது. ஆனால், நாம் அந்த அளவிற்கு எட்டவில்லை. தமிழகத்தில் ஆயிரம் பக்க நாவல்கள் வரத் தொடங்கியுள்ள இந்நாட்களில், கேரளத்தில் ஐம்பது பக்க அளவிலான மைக்ரோ நாவல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆயிரம் பக்கங்கள் பேசுகின்ற செய்திகளை ஐம்பது பக்கங்கள் கூறுகின்றன. இது அங்கு பிரபலமாகி வருகிறது. லச்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆகின்றன. அங்குள்ள மக்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கிறார்கள். நான் அதைப் படித்த போது எனக்கு ரொம்ப ஆச்சரியம். தமிழிலும் இந்த மாதிரி வர வேண்டும் என்று விரும்பினேன். அதன் விழைவே இந்நாவல். இது இக்காலச் சூழல்களைக் கொண்டதே. நிகழ்வுகள் படிமங்களாக இருக்கின்றன. தனித்தனி தலைப்புகளாக இருந்தாலும் அனைத்திற்குமான ஒத்திசைவு உள்ளே இருக்கிறது என்று பதிலுரைத்தார்.
தமிழவன்
நானும் இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்திருந்தேன். முதல் வாசிப்பில் முன்னுரை புரிந்த அளவுக்கு நாவல் உள்ளடக்கம் எனக்கும் புரியவில்லைதான். இருந்தாலும் கூர்ந்து கவனித்ததில், ஆங்காங்கே தமிழ் மொழி, இலக்கணம், தமிழர் பிரச்சினை போன்றவற்றைத் தொடுவது போலத் தெரிந்தது.
பேரா. ரவிக்குமார் வினவிய வினா எனக்குள்ளும் இருந்தது. பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய போது இருந்த இறுக்கமான சூழல் போன்று இப்போதில்லையே. பிறகெதற்கு இப்பூடகம்? இதன் வழியாக நாவலாசிரியரின் கருத்தோ, சொல்லோ, எடுத்துரைக்கும் நயமோ எதிலும் நமக்குத் தெளிவு பெற முடியவில்லை. ஒரு படைப்பு வாசகனை யோசிக்க வைக்கலாம். ஆனால், எரிச்சலூட்டக் கூடாது. அப்படி நேரும் பட்சத்தில் அதை வாசிக்க வேண்டிய கட்டாயம் வாசகனுக்கு இருக்காது.
நாவலின் முன்னுரையிலிருந்து சில வரிகளை இங்கு எடுத்து வைக்கிறேன்:
“இந்த நாவல் பன்முகத் தன்மைகளைக் கொண்டு புது வகையில் அமைந்திருக்கிறது. அதாவது இதற்குத் தமிழில் முன் மாதிரி இல்லை.”
“இப்படைப்பில் தமிழ்ப் படிமங்களும் தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் பண்பாடும் அவர்களின் நூல்களும் நாட்டுப்புறவியலும் உள்மனமும் புராணங்களும் உரைநடையாக எழுத்தாக்கப்பட்டிருக்கின்றன.”
“இதுபோல் ஒரு குறிப்பிட்ட உலக இலக்கிய மரபு பல எழுத்தாளர்களால் சமீபத்தில் உருவாக்கி வருகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸ், போர்ஹஸ், இட்டாலொ கால்வினோ, மிலராட் பாவிச் மற்றும் பல விஞ்ஞானக் கதைகளை எழுதுபவர்கள் இந்த மரபின் சில இழைகளைக் கையாள்கிறார்கள்.”
முஸல் பனி
“இரண்டு வரிகளில் எழுதியதையும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காதை காதையாக நீளக்கதையை மூன்று காண்டங்களில் எழுதியதையும் தமிழன் அறிந்து அங்கீகரித்துள்ளான்.”
“இந்த நாவலின் இன்னொரு தன்மையாகக் காட்சிகள் வழியே கதையாடல் அடுக்கு அடுக்காகக் கட்டப்படுவதைக் கூற வேண்டும். ஓர் அத்தியாயத்திற்கும் அடுத்த அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கவும் செய்கிறது; தொடர்பு இல்லாமலும் உள்ளது.”
“சீட்டுக்கட்டுப் புனைவுத் தொடர் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு தர்க்கத்திலிருந்து வளர்க்கப்படுகிறது. உள்ளே ஏதும் இல்லை. ஏன், உள் என்பதே இல்லையே!”
மேலுள்ள குறிப்புகள் ஒரு சில தான். இதற்குள்ளேயே சில முரண்கள் இருப்பதைக் காணலாம். ஒரு நல்ல நாவலுக்கு எந்த ஒரு முன்னுரையும் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால், முன்னுரை வாசகனின் சுய சிந்தனையை சிறைப்படுத்திவிடும் என்பதே என் எண்ணம். 102 பக்கங்கள் கொண்ட இந்த நாவலுக்கு எட்டுப் பக்க முன்னுரை!
முல்லா கதை மட்டுமே தெரிந்திருக்கும், இல்ல, அதுவும் தெரியாமலிருக்கும் இன்றைய இளையோருக்கு, இந்நாவல் அறிமுகம் அவர்களின் வாசிப்பை அச்சுறுத்துமே அன்றி ஆர்வமூட்டாது.
ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற இயல்புகளைக் குறித்து பேரா.எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறும் போது, “தெளிவின்றி எங்கும் கருகலாய், எவ்வளவு முயன்றாலும் ஐயப்பாட்டின் நீங்காததாய் உள்ள செய்யுட்கள் நாம் கற்று இன்புறுதற்குரிய கவிதைகள் ஆகமாட்டா” என்று கூறுவார். இந்த வரையறை எல்லாப் படைப்புகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
இவை ஒருபுறமிருக்க, தமிழவன் அவர்களின் ஸ்டக்சுரலிஸம் நூல் வெளிவரும் போது நான் சேவியர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழ்த்துறைப் பேராசிரியர்களே அந்நூலிலுள்ள பத்தியளவுள்ள நீண்ட வாக்கியங்களை வாசித்துக் காட்டி, அவற்றைப் புரியாத படிகளென விமர்சித்துக் கொண்டிருந்தனர். அது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதே வேளையில், அது தோன்றிய பின்புதான் தமிழ் இலக்கிய விமர்சனப் பார்வையின் போக்கு மாறியுள்ளது. இலக்கியங்கள் மீது நவீன உத்திகளைப் புகுத்தி வாசகனை மறு வாசிப்பிற்கு உட்படுத்தியது. படைப்பாளிகளும் விமர்சகர்களாகும் நிலை உருவாகியிருக்கிறது என்ற பன்முகச் சாளரம் திறந்ததையும் காண முடிகிறது.
பேரா.சிவசு அவர்கள்
பேரா.சிவசு அவர்கள் எதை எடுத்துச் செய்தாலும் அது எதிர்காலத் தளமாக இருக்கும். அவர் எப்போதுமே அடுத்த தளத்தைப் பற்றி யோசிப்பவர்; நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்பவர். அவர் எடுத்து நடத்தும் பயிற்சிப் பட்டறைகளும் அப்படிப்பட்டதே. அந்த வகையில் தமிழவனின் இந்நாவல் எழுப்பிய வினாக்களாகட்டும்; விடைகளாகட்டும். அவை இப்போது தெளிவின்றித் தெரிந்தாலும் அவற்றின் உண்மைப் புலத்தை காலம் காட்டி விடும்.
* * *

நெல்லையில் ஒரு நிகழ்வு "மேலும்"இலக்கிய இயக்கத்தின் சார்பாக


02 ஏப்
அசின் சார், கழுகுமலை.நெல்லையில் ஒரு நிகழ்வு மார்ச் 29, புனித வெள்ளி.
மாலை 3 மணி.
தேவாலயத்தில் நடைபெறும் தியான நிகழ்வுக்கு என் மனைவி கிளம்பிக் கொண்டிருந்த பொழுது, நான் பேரா.சிவசு அவர்கள் நெல்லையில் நடத்தும், “பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்” நிகழ்வுக்குக் கிளம்பினேன்.
நெல்லை ஜானகிராம் ஹோட்டல் அரங்கம்.
சிவசு அவர்களின் மேலும் அமைப்புடன் பேராசிரியர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கூடியிருந்தனர்.
மாலை 5 மணி.
பேரா.வேலம்மாள் அவர்களின் வரவேற்புரை தொடங்கியது. நெல்லையில் பணி ஓய்வு பெறும் பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.
பேரா.மகாதேவன் தன் வாழ்த்துரையில், “நின்று கொண்டே இருப்பதைவிட, சென்று கொண்டே இருப்பது நன்று. ஊடகங்களுக்கேற்ப படைப்பாளிகள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், காகிதங்கள் இல்லா நூலகங்கள் ஆகிவிட்ட காலம் இது. அந்த வகையில் கவிஞர் கல்யாண்ஜி அவர்களும், கவிஞர் சுகுமாரன் அவர்களும் புதிய தடத்தில் பயணம் செய்கிறார்கள். வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் சிறந்தவர்கள். ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இவ்விருவரும் நல்ல மனிதராக, ஆசானாக வாழ்ந்து காட்டியவர்கள். தங்களின் பணிக் காலத்தில் மாணவர்களுக்குப் பல வாயில்களைத் திறந்து விடக் கூடியவர்களாய் இருந்துள்ளார்கள். தங்களை விட தங்களுடைய மாணவர்களை உயர்த்தி மகிழ்ந்த பெருமைக்குரியவர்கள். பேரா.கட்டளை அவர்கள் காமராசர் பல்கலைக் கழகத்தில் கழியலாட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்துள்ள இவர் உ.வே.சா. போன்ற பணியை மேற்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் சுவடிக் காப்பகம் அமைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர்கள் கட்டளை ஐயாவை அணுகினால் மிகுந்த பயனுடையதாய் இருக்கும்” என்றார்.
பேரா.இராமச்சந்திரன் தனஞ்செயனை வாழ்த்திப் பேச வந்தார்.
“1987-ல் நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கியவுடன் பேரா.லூர்து அவர்கள் துறைத் தலைவர் ஆனார். அப்போது தமிழ்த் துறைக்கும் அவர்தான் துறைத் தலைவர். ஓராண்டு காலம் இருதுறைகளுக்கும் தலைவராகப் பணியாற்றினார். அன்றிருந்தே பேரா.தனஞ்செயன் பணியாற்றி வருகிறார்.
நாட்டார் வழக்காற்றியல் புலம் தூய சவேரியார் கல்லூரியில் உருவானதற்கு பேரா.நா.வானமாமலைக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டார் வழக்காற்றியல் குறித்த ஆய்வுகளை அன்றவர் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பேரா.லூர்து அவர்கள் தாம் எழுதிய கட்டுரைகளைத் திருத்தி வாங்க அவரிடம் சென்றார். அவருடைய உரையாடலால், அவரிடம் எடுத்த பயிற்சியால், நாட்டார் வழக்காற்றியல் புலம் சேசு சபை குருக்கள் துணையோடு தூய சவேரியார் கல்லூரியில் உருவானது. சிலர் இதை கொட்டடிக்கிற துறை என்பார்கள். ஆனால், இத்துறை வழக்காறுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதாக இருந்தது. மொழியியல், வழக்காற்றியல், மானிடவியல், பண்பாட்டியல், அமைப்பியல் போன்றவற்றைப் பாடமாக வைத்து சொல்லிக் கொடுத்தது.நெல்லையில் ஒரு நிகழ்வு பேரா.லூர்து அவர்கள் இத்துறைக்கென ஒரு நூலகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் இருந்தார். ஒருவருக்கு ஏற்படும் சந்தேகத்தை மற்றொருவரிடம் கேட்டு விவாதித்து இருக்கிறோம். அப்போது எங்களிடையே முரண்பாடுகளும் உண்டு. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தறிந்தோம். ஏனெனில், அமைப்பியலோ, மொழியியலோ அவ்வளவு எளிதானதல்ல.
அமெரிக்காவிலிருந்து போர்டு பவுண்டேசன் பண்ட் வந்தது. அதைத் தொடர்ந்து பாளை, கொடைக்கானல், திரிச்சூர் போன்ற இடங்களில் உலகளாவிய பட்டறைகள் நடத்தப்பட்டன. அதே போல பின்லாந்திலிருந்து இங்கு வந்து வகுப்பெடுத்து இருக்கிறார்கள். இக்கூட்டு செயல்பாடுகளுக்குப் பேரா.லூர்து அவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
1996-ல் பேரா.லூர்து அவர்கள் விட்டுச் சென்றதை, பேரா.தனஞ்செயன் நம்பிக்கையோடு துறைத் தலைவராக இருந்து பணியாற்றி வந்திருக்கிறார். எப்போதும் படிப்பதும் எழுதுவதுமாக இருக்கும் இவர், 32 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். “குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்” என்ற நூலில் சுறாமுள் வழிபாட்டை ஆய்வு செய்துள்ளார். “நிகழ்த்துக் கலைஞர்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் நிகழ்த்துக் கலைஞர்களுக்குரிய பிரச்சனைகளை ஆய்வு செய்திருக்கிறார். அதிலுள்ள பூம் பூம் மாட்டுக்காரர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை ஏதென்ஸில் வாசித்தளித்துள்ளார். “ஆவணப் படங்களும் கோட்பாடுகளும்” என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இவரின் பணி நிறைவுக்குப் பின், வருகைதரு பேராசிரியராகப் பணியாற்ற பல்கலைக் கழகம் அழைத்துள்ளது இன்னுமோர் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.
தொடர்ந்து, கவிஞர் கல்யாண்ஜி கவிதை வாசிக்க வந்தார்.
நிகழ்ச்சி மிகச்சரியாக ஐந்து மணிக்குத் தொடங்கியதை திருநெல்வேலியில் எப்போதாவது நடக்கும் ஆச்சர்யமாக விளித்தவர், ‘மேலும்’ அமைப்பைப் பாராட்டினார்.நெல்லையில் ஒரு நிகழ்வு “தயவு செய்து எல்லோரும் ‘மேலும்’ என்ற சொல்லை உச்சரித்துப் பாருங்கள். எனக்கு முன் இருக்கிற சிறு குழந்தைக்கு மேலும் ஒரு பிஸ்கட் தேவைப்படலாம். என்னுடைய மனைவிக்கு மேலும் கொஞ்சம் தாமிரபரணித் தண்ணீர் வராதா என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம். என்னைப் போன்ற படைப்பாளிகள் மேலும் ஒரு கவிதை எழுதிவிட மாட்டோமா என்று நினைக்கலாம். இப்போது ‘மேலும்’ என்ற ஒற்றைச் சொல்லோடு இங்கு நிற்கிறேன்.
பேராசிரியர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடைவெளி உண்டு. அதைக் குறைப்பதில் சிவசு 51 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். நான் அதிகம் வெளியில் செல்லாதவன், மேடைகளில் பேசாதவன். சிவசு, என்னை கை பிடித்து கூட்டிச் செல்கிறார். கைகளைப் பிடித்துச் செல்வது எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
கவிதை வாசிப்பு நிகழ்வு மலையாளத்தில் உண்டு. கவிதையை எழுதியவரே வாசிப்பது திருநெல்வேலியில் இதுவே முதல் முறையாக இருக்கலாம். கவிஞர் சுகுமாரன் முன்னால் சற்று கூச்சத்தோடு என் கவிதைகளை வாசிக்கிறேன்.
மல்லிகை பூக்கும், மாம்பூ பூக்கும், தேக்கும் பூக்கும்.
“தேக்கும் பூக்கும்” அவ்வளவு தான் கவிதை.
பெருமாள் நகர் புறநகர்ப் பகுதியில் காலை நடை பயிற்சி செல்லும் போது நெடிய தேக்கு மரங்களைப் பார்க்கிறேன். சுவர்களுக்கு வெளியே தேக்குச் சருகுகள் உதிர்ந்து கிடப்பதைக் காண்கிறேன். முதிர்ந்த தேக்கு இலைச் சருகுகளில் மழைத் துளி விழும் போது எழும் அதிர்வுகள்; தென்னை ஒற்றைக் கிடுகு ஆடும் போது வரும் ஓசை – இவற்றை என்னைப் போன்றவர்கள், சுகுமாரன் போன்றவர்கள் அடுத்த நாள் கவிதையாக எழுதி விடுகிறோம்.
‘தேக்கு’ உறுதிக்குச் சொல்கிறோம்.
“தேக்கும் பூக்கும்” இது இன்னும் நெறைய சொல்கிறது.” என்றவர் தொடர்ந்து அவருடைய கவிதைகளை வாசித்தார். அரங்கம் அமைதியாகக் கேட்டதைக் கண்டு பாராட்டினார்.
இலக்கியங்களின் போக்கு பற்றி கவிஞர் சுகுமாரன் பேசும்போது, “மலையாள இலக்கியத்தை வரலாற்று மாணவனைப் போல ஆய்வு செய்து கூறினார். நவீனத்துவம், பின் நவீனத்துவம், ரசனை சார்ந்தவை, பெண்ணியம் என்று பகுத்துப் பார்த்தார். தகழி சிவசங்கரன் பிள்ளையின் படைப்புகளை மறுமலர்ச்சிக் காலகட்டமாகக் கூறினார். வைக்கம் முகமது பஷீர் தந்த புதுமை மாற எழுத்துக்களையும்; சக்கரியா தந்த புதுமையான நடையையும் குறிப்பிட்டவர், எண்பதுகளில் இருந்து மலையாள இலக்கியங்களில் நவீனத்துவம் வலுவிழந்தது” என்றார்.நெல்லையில் ஒரு நிகழ்வு மீடியாக்களில் உள்ளவர் என்பதால், அது குறித்து சிவசு வினவியதற்கு, “மீடியாக்கள் பற்றிய அடிப்படை அறிவு தமிழ் மீடியாக்களுக்கு இல்லை. மீடியா செயல்பட குறைந்த பட்ச சுதந்திரம் வேண்டும். அது மலையாளத்தில் இருக்கிறது, தமிழில் இல்லை” என்று பதிலுரைத்தார்.
தொடர்ந்து, பேராசிரியர்கள் கட்டளை கைலாசம், தனஞ்செயன் இருவரின் ஏற்புரையுடன் விழா சரியாக 8 மணிக்கு நிறைவுற்றது.
அக இருளகற்றும் பேராசிரியர்களோடும், சமூகத்திலுள்ள அவலங்களையும் அழகியலையும் சுட்டிக்காட்டும் படைப்பாளிகளோடும் எனது ‘புனித வெள்ளி’ முடிந்தது.
அரங்கத்தை விட்டு வெளிவரும் போது, படைப்பாளிகளின் ஏக்கமும் சிலுவைப் பாடுகளின் ஏக்கமும் ஒன்றெனப் பட்டது.
வீடு திரும்பிய போது இன்றைய தியான சிந்தனை நன்றாக இருந்தது என்றாள் என் மனைவி.
நானும் அதையே சொன்னேன்.
* * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *    * * *     * * *    * * *    * * *   * * *   * * *   * * *   * * *
தொடர்புடைய பதிவுகள்:
‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை
பொதிகை அடிவாரத்தில் முஸல் பனி

‘சிவசு’வின் பயிற்சிப் பட்டறை

மாதாந்த தொகுப்புகள்:செப்ரெம்பர் 2012


அசின் சார், கழுகுமலை.28 செப்

முதலில் ‘சிவசு’ பற்றி…
பாளை. தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நா.சிவசுப்பிரமணியன் அவர்கள். அனைவராலும் ‘சிவசு’ என்றே அறியப்பட்டவர். பணி ஓய்வு பெற்றிருந்தாலும், இலக்கியத்திற்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் பணியாளர் அவர். ஓய்வு பெறும் முன்பும் சரி, பின்பும் சரி, இலக்கியம் சார் கூட்டங்கள் எங்கு எப்போது நிகழ்த்தினாலும் தவறாமல் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி விடுவார். இன்று வரை எனக்குத் தெரிந்த அளவில், தன் சொந்தப் பணத்தை செலவழித்து, மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திவரும் ஓர் அற்புத மனிதர் அவர் மட்டுமே. நான் அன்னாரின் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
எந்த ஓர் இலக்கியத்தையும் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். மார்க்சிய, பெண்ணிய, தலித்திய உத்திகளோடும் பார்க்க வேண்டும் என்பார். கல்லூரி நாட்களில் அவரது ஒவ்வொரு வகுப்பும் எங்களுக்கு இலக்கிய ஆய்வரங்கு போலவே இருக்கும். ஒரு படைப்பு அச்சில் ஏறும் வரைதான் எழுத்தாளனுக்குச் சொந்தம். அதன் பின்பு அது வாசகனுக்கு உரியது. வாசகன் அதை எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பார். நவீன விமர்சன உத்தி, மேடைப் பேச்சு, புத்தகம், புத்தகக் கடை, ‘மேலும்’ இதழ், வெளியீட்டகம் என்று படிப்பிலும் படைப்பிலும் அவரிடம் இருந்த ஆர்வத்தை நான் அவரிடம் படித்த நாட்களிலேயே பார்த்திருக்கிறேன்.

இன்றும் எழுத்து, வாசிப்பு, பயிற்சி, பட்டறை என்று தொடர்ந்து தன் வயதை இலக்கியப் பணியால் நிரப்பிக் கொண்டிருக்கும் ‘சிவசு’ அவர்கள், சமீபத்தில் ஓர் அழைப்பிதழை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 2012 செப்டம்பர் 15,16 ஆகிய இரு தினங்கள் “சிறுகதை வாசிப்பும் படைப்பும் – பயிற்சிப் பட்டறை” என்றிருந்தது. நான் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டேன். பல்வேறு கல்லூரிகளில் இருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். மாணவிகள் அதிகமாகத் தெரிந்தது.
‘கூகை’ நாவலாசிரியர் சோ.தர்மன், தன் தொடக்க உரையில், “சங்கீதம், பரதம் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். இலக்கியம் படைப்பதை அப்படிக் கற்றுக் கொள்ள முடியாது. பணம் கொடுத்தும் படைப்பாளியாக ஆக முடியாது. பட்டப் படிப்பு தகுதியுடன் வேலைக்குச் செல்வது போன்ற அவசியமும் இதற்கு இல்லை. படைப்பாளிக்குத் தேவையான ஒரே ஒரு தகுதி – எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாப் போதும்! நான் படிக்கவில்லை. ஆனால், என்னுடைய படைப்பைப் பல்கலைக் கழகங்கள் பாடமாக வைத்திருக்கின்றன. அனைவரும் படிக்கிறாங்க. உங்களுக்கு நான் சொல்வது, எது கிடைத்தாலும் வாசியுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துக் கொண்டே இருங்கள். வாசிக்க வாசிக்க, எதை வாசிக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எப்போது இதைப் புரிந்து கொள்கிறீர்களோ, அப்போது நீங்கள் படைப்பாளி. பார்த்தது, கேட்டது, ரசித்தது என்று எதையும் எழுதலாம். திருவிளையாடல் படத்தில், ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்ற பாடல் வரும். அது திருவிளையாடல் புராணத்தில் உள்ளதன்று, குறுந்தொகைப் பாடல். ஆனால், அதைக் கொண்டு போய் அந்த சினிமாவில் சொருவியதுதான் கிரியேட்டிவிட்டி! அந்த கிரியேட்டிவிட்டிதான் நமக்கு வேணும்” என்றார்.

முதலாம் அமர்வில் எழுத்தாளர் வண்ணதாசன் முன்னிலையில் அவரின் ‘ஈரம்’ சிறுகதை வாசிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் புரிதலை முன் வந்து பகிர்ந்து கொண்டனர். இறுதியில் அவர் பேசினார். “இன்று செப்டம்பர் 16. கி.ரா.வின் பிறந்த நாள்” என்பதை நினைவு படுத்தியவர், தொடர்ந்து பேசியதில் சில பகுதிகள்: “கதாசிரியன் பெரும்பாலும் யூகிக்கிறவனும், அநுமானிக்கிரவனுமாய் இருக்கிறான். ஈரம் கதையில் வரும் அண்ணாச்சி, லோகு மதினி, முருகேசன், வாழை, ஈரம் எல்லாம் அவர்களல்ல, நாம் தாம். நாம் தாம் எல்லாம். அது போல உங்கள் கதை மாந்தர்களை உங்கள் வாழ்விலிருந்து தேர்ந்து கொள்ளுங்கள். கதையின் ஆரம்ப வரிகளைத்தான் நான் எழுதுகிறேன். முடிவு தானாக எழுதிக் கொள்கிறது. சமையல் குறிப்பு போல அளவு சொல்ல முடியாது. ஆனால், அக்குறிப்பின் கடைசியில் “தேவையான அளவு உப்பு” என்றிருக்கும். எது தேவையான அளவு? என்று நீங்கள் தெரிந்து கொள்ளும் போது ‘கதை’ எழுதி விடலாம். ஐம்பது வருடம் கதை எழுதிய எனக்கு, காதல் கதை எழுதவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு” என்றார். மேலும் அவர், வ.உ.சி.கல்லூரியில் பி.காம். படித்த நாட்களையும், அந்நாட்களில் தனக்கு கிடைத்த கதைக் களங்கள், கதைமாந்தர்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த சிவசு அவர்கள், “ஒரு நல்ல டெக்ஸ்ட் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனையைத் தரவேண்டும். அந்த வகையில், வண்ணதாசன், வண்ணநிலவன், ஜெயமோகன் இக்காலகட்டத்தின் முக்கிய எழுத்தாளர்கள்” என்றார்.
அடுத்ததாக, லா.ச.ராமாமிருதம் எழுதிய ‘அபிதா’ நாவல் குறித்து பேரா.தனஞ்செயன் பேசினார். “அபிதா நாவல் படித்த பின், ரொம்ப நாளாக நான் அதிலேயே வாழ்ந்தேன். என் மகளுக்கும் அதனால் தான் ‘அபிதா’ என்ற பெயரை வைத்தேன்” என்றவர், “எந்த ஒரு கலையும் சமூகத் தொடர்பின்றி இருக்க முடியாது. மேலும், இந்த மாதிரிப் பட்டறைகள் நம்முடைய கிரியேட்டிவிட்டியை இன்னும் கொஞ்சம் தூண்டி விடுகின்றன.” என்றார்.

மீண்டும் சோ. தர்மன் பேசும் போது, இவ்வாண்டு கல்கி தீபாவளி மலருக்காகத் தான் எழுதிய ‘பட்சிகள்’ சிறுகதையைக் கூறிவிட்டு, “மூடநம்பிக்கைகளை முழுசா நிராகரிக்கவும் முடியாது, முழுசா ஏத்துக்கவும் முடியாது” என்றார். மேலும், “படைப்புக்கான கரு வாழ்வில் காணும் நிகழ்வுகளின் கோர்வைதான். நேற்று நான் இங்கு வரும் போது, சாலையில் ஒரு கழுதை அடிபட்டுக் கிடந்தது. பக்கத்தில் குட்டிக் கழுதை பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பாவம், அதற்கு கார் கண்ணாடியை உடைக்கத் தெரியாது; கம்ப்ளெயின்ட் பண்ணத் தெரியாது; மறியல் பண்ணவும் தெரியாது. ஏதும் சொல்லவோ, செய்யவோ தெரியாத அது நின்னுக்கிட்டே இருந்தது. இந்த நிகழ்வு என் மனதில் ஆழமா பதிஞ்சிருச்சு. என்றாவது ஒரு நாள் இது ஒரு படைப்பாக வடிவம் பெறும்” என்றார்.
சிவசு அவர்கள், “தமிழ்த் துறைக்கு வெளியே உள்ளவர்களால்தான் தமிழ் வளர்க்கப்படுகிறது. வல்லிக்கண்ணன் இதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை” என்ற கருத்தையும் கூறினார்.
அடுத்த அமர்வில், சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘மாபெரும் சூதாட்டம்’ சிறுகதை அவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. மாணவர்களின் கருத்துரைகளைத் தொடர்ந்து இந்திரஜித் பேசினார். எந்தப் போக்கும் வாழ்வினுடைய, காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. என்ற அவர் கதையிலுள்ள வரிகள் அவரின் உரைக்குப் பின்புதான் புரிந்தது.
நாறும்பூநாதன் மார்க்சியப் பார்வை பற்றிப் பேசும்போது, “மார்க்சியம், சமமற்ற தன்மையை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறது” என்றார்.

நிறைவு விழாவில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தன் உரையில், “கலை உணர்வு இல்லாதவர்கள் படைப்பாளியாக முடியாது. பயிற்சிப் பட்டறை மட்டுமே ஒருவனை படைப்பாளி ஆக்கி விடாது. நீங்கள் பயிற்சிப் பட்டறை செல்லும் போது, படைப்பாளி கூலி வேலைக்குச் செல்கிறான். மேலும், படைப்பாளி எப்போதும் நிகழ்கால நிகழ்வுகளையே எழுத வேண்டும். கூடங்குளத்தை பற்றி, சிவகாசி வெடி விபத்தைப் பற்றி எழுத வேண்டும். அரசுக்குப் பின் வால் பிடித்துச் செல்பவனாக படைப்பாளி இருக்கக் கூடாது. நான் எழுதிய ஐந்து நாவல்களும் பரிசு பெற்றுள்ளன. எழுதுவதை ஆத்மார்த்தமாக எழுத வேண்டும். நான் தமிழ் படிச்சதே கிடையாது. தமிழ் நாட்டில், தமிழ் படிக்காத நான் எழுதியவை பரிசு பெற்றுள்ளன என்றால், அவை ஆத்மாவின் மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கணத்திற்கும், படைப்பிலக்கியத்திற்கும் சம்பந்தமே கிடையாது. படைப்பாளி மொழி ஆத்ம மொழி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அந்நிய சக்திகளின் தூண்டுதலோடு இயற்கை, காடு, நதி எல்லாம் அழிக்கப்படுகிறது. உலக உயிரினங்கள் எல்லாம் மனிதனுக்குத் தேவை. ஆனால், அவைகளுக்கு மனிதன் தேவை இல்லை. எனவே, மனித நேயம் வளரவும், அதைப் பேசவும் நிர்வாகம் இது போன்ற பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்.” என்றார்.
ம.தி.தா.இந்து கல்லூரி பேரா.கட்டளை கைலாசம், “பேராசிரியர்களால் படிப்பாளிகளை உருவாக்க முடிகிறது. ஆனால், படைப்பாளிகளை உருவாக்க முடிவதில்லை” என்றார்.

தமிழக அளவில் 146 கல்லூரி மாணவர்கள் அனுப்பியிருந்த சிறுகதைகளில், சிறந்த பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பரிசு வழங்கினர்.
விழாவிற்கு திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்களும், சிவசுவும் பொருளுதவி செய்திருந்தனர். கல்வியாளர்களின் உதவியோடு நடந்த கல்வி சார் விழாவை இங்குதான் கண்டேன். இது நல்ல முன்மாதிரி. இப்படிப்பட்ட விழாக்களால்தான் எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலாகப் பேச முடியும். நிர்வாகத்திற்கும் கல்லூரி முதல்வருக்கும் நம் வாழ்த்துகள்.

இன்றைய இளைய தலைமுறை மாணவர்கள் கூட்டமாக நின்று எழுத்தாளர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை முதன் முறையாகப் பார்த்தேன்.
பொதிகை மலை அடிவாரம், மூலிகைக் காற்று, சிலிர்க்கச் செய்யும் சிறு தூறல், படரும் மேகங்களூடே அவ்வப்போது வரும் வெம்மை தராத வெயில், உணவு, படுக்கை வசதியுடன் பாரம்பரியம் மிக்க கல்லூரியில் இரண்டு நாள்கள். படைப்பாளி, படைப்பு, வாசகன், திறனாய்வாளன், பேராசிரியர்கள் என்று எல்லோரையும் ஓரிடத்தில் சந்தித்த மகிழ்ச்சி – அனைவர் முகத்திலும் அகஸ்தியர் அருவியாய்க் கொட்டியது.
வந்த வாசகரெல்லாம் படைப்பாளியாய் திரும்பிக் கொண்டிருந்தனர் வீட்டுக்கு!
* * *
தொடர்புடைய பதிவுகள்:
நெல்லையில் ஒரு நிகழ்வு
பொதிகை அடிவாரத்தில் முஸல் பனி

வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்


26 திசெ
அசின் சார், கழுகுமலை.
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
எனக்கு நடுநிலைப் பள்ளி மாணவ வயது இருக்கும்.
அப்போது, கழுகுமலை மற்றும் பக்கத்துக் கிராமங்களிலுள்ள கோவில் திருவிழாக்களில் நடைபெற்ற நாடகங்களை விரும்பிச் சென்று பார்த்திருக்கிறேன். அதில் அரசர் நாடகங்களும் உண்டு; சமூக நாடகங்களும் உண்டு. அம்மேடைகளில் தோன்றும் ஒப்பனை மாந்தர்களும், காட்சிகளுக்கேற்ப மாற்றும் திரைச் சீலைகளும் அந்த வயதில் பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தது.
ஒரு சமயம் செட்டிகுறிச்சி மொட்டைக் கோவிலைக் கட்டுவதற்கு வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் ஒரு பஸ் நிறைய வந்திருந்தனர். ஒருநாள் இரவு, அவர்கள் செட்டிகுறிச்சி தெரு முனையில் இயேசுவின் சிலுவை மரணத்தைத் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்கள். அதைப் பார்த்து அச்சிறுவயதில் என் ஈரக்குலையே பதறியது. அந்த அளவிற்கு எதார்த்தம். அந்த அதிர்ச்சி நிகழ்வு என் மனதிலிருந்து கலைய நெடுநாள் பிடித்தது. நடந்தது நாடகமென்றாலும் அதை நிஜமாகவே பாவித்த வயது அது. இப்போது நினைக்கிறேன், நான் பார்த்த முதல் வீதி நாடகம் அதுதான்!
கழுகுமலை, ஆர்.சி.சூசை உயர்நிலைப் பள்ளியில் படித்த போது ஆறுமுகம் என்ற ஆசிரியர் ‘ரொட்டித்துண்டு’ என்ற ஓரரங்க நாடகத்தை நிகழ்த்தினார். அதில் நடித்த மாணவர்களுள் நானும் ஒருவன். திரைச் சீலை இல்லை; ஒப்பனை இல்லை; பொருட்கள் ஏதும் பயன்படுத்த வில்லை. நடிப்பும் பாவனையும் மட்டுமே கதையையும் உணர்ச்சியையும் பார்வையாளனிடம் கொண்டு சேர்த்தது. இது இன்னொரு புது வடிவ நாடகமாகப் பட்டது.
அந்நாட்களில் கோவில் கொடைவிழாக்களுக்கு அழைத்து வரப்படும் கரகாட்டங்களில், ‘குளத்தூர் ஆட்டக் குழு’வினரின் நிகழ்வு வித்தியாசமானது. ஏனெனில், கொஞ்சங்கூட பிசகாமல் பேசும் வட்டார வழக்கு மொழியுடன், மக்களின் மூட நம்பிக்கைகளைத் துணிந்து சாடும் அவர்களின் கலைத்திறன் என்னை மிகவும் வியக்க வைத்த மற்றொன்று.
பின்பொருமுறை, நெல்லையில் விவிலியம் சார்ந்த ஒலி ஒளிக் காட்சி நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு நிகழ்வுத் தளங்களைக் கொண்ட அந்நிகழ்வு அதுவரை நான் கண்டிராத புது விதம்.
கோவில்பட்டி வருடாந்திரப் பொருட்காட்சியில் நடைபெறும் எம்.ஆர்.ராதா நாடகம் முதல் சோ.ராமசாமி, கோமல் சுவாமிநாதன், ஆர்.எஸ்.மனோகர் என்று என் தேடல் விரியத் தொடங்கியது.
கல்லூரி நாட்களில் செய்யுள் நாடகம் தொடங்கி சுதந்திரப் போராட்ட கால நாடகங்கள், திராவிடக் கழக நாடகங்கள், துப்பறியும் மற்றும் நகைச்சுவை நாடகங்கள் என்று தேடித் தேடி படித்ததுண்டு. திரைப்படங்களாக வந்த நாடகங்களையும் பார்க்கும் ஆர்வம் குறையவில்லை.
சேவியர் கல்லூரியில் படித்த காலத்தில், அங்கு ஐக்கஃப் என்றொரு மாணவர் இயக்கம் இருந்தது. அதிலுள்ள மாணவர்கள் நிகழ்த்திய அணுஉலை, எய்ட்ஸ், எழுத்தறிவு – பற்றிய விழிப்புணர்வு வீதி நாடகங்கள், வேறொரு கோணத்தைக் காட்டின.
சென்னை தொலைக்காட்சி – கொடைக்கானல் ஒளிபரப்பு ஆரம்பித்த பின்னர், தேசிய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் நாட்டிய நாடகங்கள் வேறெங்கிலும் கண்டிராத மற்றொரு புதுப் படைப்பாக இருந்தன. இன்னும்…
“வியாபாரமாயணம்” - நவீன நாடகம்
திருச்சி கலைக்காவிரி குழுவினரின் பலவித நாடகங்கள்…
கலைஇரவு மேடைகளில் தாமிரபரணி கலைக் குழு (சங்கரன்கோவில்) நடத்திய எளிமையும் எதார்த்தமும் கொண்ட வீதி நாடகங்கள்…
கல்லூரி மேடைகளில் மாணவர்கள் நடத்திய ‘Miming’ நிகழ்வுகள்…
இந்த வரிசையில் 2003-ஆம் ஆண்டு கோவில்பட்டியில் முனைவர் மு.ராமசாமியின் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ என்ற நாடகத்தைப் பார்த்தேன். அது நாடகத்தை வேறொரு பார்வையில் பார்க்கச் சொன்னது. அதன்பின் மு.ரா. பற்றியும், அவருடைய படைப்புகள் பற்றியும் எப்போதும் என்னுள் சிறு தேடல் உண்டு.
கடந்த வாரங்களில் மு.ரா.வின் ‘வியாபாரமாயணம்’ என்ற நவீன நாடகம் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வந்தது. பாளை, தூய சேவியர் கல்லூரியில் இந்நாடகம் கடந்த 17.12.2013 அன்று நிகழ்ந்தது. பேரா.சிவசு அவர்கள் என்னை அழைத்திருந்தார். சென்றிருந்தேன்.
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
நாடகத்தைப் பற்றி சொல்லும்முன் முதலில்…
பேரா.மு.ரா. பற்றி:
சொந்த ஊர் : பாளையங்கோட்டை
1971-ல், பாளை – தூய சேவியர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பட்டப் படிப்பு புதிதாகத் தொடங்கிய போது, முதல் தொகுதியில் ( First batch) பயின்ற மாணவர்களில் இவரும் ஒருவர். பேராசிரியர்கள் தே.லூர்து, சிவசு, பொ.செ.பாண்டியன் ஆகியவர்களின் மாணவர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், “தோல் பாவை நிழற் கூத்து” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இதற்காக இவர் பாவைக்கூத்து நிகழ்த்துக் கலைஞர்களுடன் இரண்டாண்டுகள் கூடவே தங்கியிருந்து, அவர்களோடு வாழ்ந்து ஆய்வு நடத்தியுள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். செம்மொழி குறித்த ஆய்வுக்காக தமிழக அரசால் சென்னைக்கு அழைக்கப்பட்டு உள்ளார்.
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
மதுரையில், ‘நிஜ நாடகக் குழு’வைத் தொடங்கி பல நாடகங்களை நிகழ்த்தியவர். குறிப்பாக இவர் நிகழ்த்திய, துர்க்கிர அவலம்(1984), சாபம்! விமோசனம்?(1987), ஸ்பார்டகஸ்(1989), இருள் யுகம்(1994), முனி(1995), கலிலியோ(1999), கட்டுண்ட பிராமிதியஸ்(2002), கலகக்காரர் தோழர் பெரியார்(2003), தோழர்கள், வலியிருப்பு போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் முதல் தென் மண்டல நாடக விழாவில் இவருடைய ‘துர்க்கிர அவலம்’ நாடகம் நடத்தப்பட்டது. அதில் பிற மாநிலத்தவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற இந்நாடகம், தேசிய நாடக விழாவிற்கும் தேர்வானது.
இவ்வாறு, இவர் நாடகத் துறையோடு கொண்ட வாழ்க்கை நாற்பது ஆண்டுகால நீளம் கொண்டது. இதோடு, தன் ஆசைக்குக் கொஞ்சம் சினிமாவையும், கொஞ்சம் விவரணப்படத்தையும் தொட்டுக் கொண்டவர்.
இனி நாடகம் பற்றி:
அழைப்பிதழில் நிகழுமிடம் சேவியர் கல்லூரியிலுள்ள ‘இலயோலா அரங்கம்’ என்று குறிப்பிட்டிருந்தாலும், நிகழ்வானது அரங்கத்திற்கு வெளியே தரையில் மரங்களுக்கிடையே நிகழவிருந்தது. காட்சித் தொடர்பியல் மற்றும் தமிழ்த் துறை மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் என்று சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். அவர்களில் பேரா.பொ.செ.பாண்டியன், வண்ணதாசன், தொ.பரமசிவம், பேரா.கட்டளைக் கைலாசம், அருட்தந்தை லூர்துசாமி, நாறும்பூநாதன் போன்றோரும் இருந்தனர்.
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
அருகிலிருந்த முகம், தெரியாத அளவிற்கு மாலை இருள் வெளிச்சத்தை விழுங்கியதும், மின்னொளியில் நிகழ்வு தொடங்கியது. நெல்லை மணிகண்டன் வாத்திய இசை ஒலிக்க, மு.ரா.வும் கூத்துப் பட்டறையைச் சேர்ந்த ஆனந்தசாமியும் களத்தில் தோன்றினர்.
ஆயாசமாக வந்த ஆனந்தசாமி, ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு தலைக்கும் கைக்கும் ஒரு வெள்ளைத் துண்டை வளைத்துப் போட்டார். அது ‘விநாயகர்’ என்று பார்வையாளன் புரியும் போதே, ஏதோ ஒன்றை வித்தியாசமாக நிகழ்த்தப் போகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
‘ஆத்திகம், நாத்திகம்’ என்று ஆரம்பித்து, ‘அறிவா புனைவா?’ என்று பட்டிமன்றத் தலைப்பு போல வினா அமைத்து மாற்றி மாற்றிப் பதிலளித்து கருத்தை வளர்க்கிறார்கள். அதிலிருந்து சமகால சமூக, அரசியல் சூழல்கள் அனைத்துமே வியாபாரமாயின என்பதை எள்ளலோடு நகர்த்துகிறார்கள். அவ்வப்போது பயன்படுத்தும் Caption போன்ற சொற்றொடர்கள் சமூக அவலச் சுட்டிகளாக இருக்கின்றன. தொடர்ந்து ‘ஞெகிழி’ என்ற சொற்பதத்தை அறிமுகம் செய்கின்றனர். மனிதன் இயற்கையை அழித்து எல்லாம் செயற்கையான பின் உணவு மட்டும் என்ன வாழுது? அதுவும் ஞெகிழி ஆகிவிட வேண்டியதுதானே? இது தான் நாடகத்தின் முடிச்சு! ஞெகிழியைப் புனைவால் விளம்பரப்படுத்தி, அறிவால் வியாபாரமாக்குகிறார்கள். அறிவும் புனைவும் இயைந்த ராமகதை போல வியாபாரமும் ஆனதால், இது ‘வியாபாரமாயணம்’ ஆயிற்று! இதுதான் கதை.
அசை போட்டவை: “ + ”
மு.ரா., ஆனந்தசாமி இருவர் மட்டுமே நடிகர்கள்; இசைக்கு நெல்லை மணிகண்டன். இவர்களோடு ஐம்பது நிமிட நாடகம் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அளவிற்கு நாடகத்தைக் கொண்டு செல்கிறார்கள். இதை ராஜீவ் கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.
ரோஜா பாக்கு விளம்பரத்தில் முகங்கள் மாறுவதைத் திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு நம் கண் முன்னே உலவிக்கொண்டிருக்கும் இருவரும் திடீரென வேறு வேறு பாத்திரங்களாக மாறி வியக்க வைக்கிறார்கள். கொஞ்சமும் செயற்கை கலவாத மு.ரா.வின் நடிப்பு நம்மை வெகுவாகக் கவர்கிறது. 62-வயதுப் பெரியவராக இருந்தாலும், அவரது கால்களிலோ குரலிலோ தளர்வு இல்லை. வெட்ட வெளியில் மைக் இல்லாமல் பலத்த குரலில், பின் வரிசையில் இருப்பவர்களுக்கும் கேட்குமாறு பேசுவது எளிதானதல்ல.
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
இந்நாடகத்தைப் பொறுத்தவரை இருவருக்கும் பிரமாதமான ஆடையென்று ஏதுமில்லை. சர்கஸில் பபூன் போடும் ஆடை; அது நிகர்ப்ப ஒப்பனை. அவ்வளவுதான். களமும் காட்சியும் ஒன்றாக இருப்பதால், அவர்களின் நடிப்புத் திறத்தாலே களமும் காட்சியும் மாறுபடுகிறது. இது புதுமை என்பதை விட, அவர்களின் அனுபவத் திறமை என்பதே சரியாக இருக்கும்.
இந்நாடகத்தில் பயன்படுத்திய பொருட்களை மிக எளிதாக வரிசைப்படுத்தி விடலாம். ஒன்றுக்குள் ஒன்றாக நுழையும் மூன்று ஸ்டீல் ஸ்டூல்கள். ஒரு மர  ஸ்டாண்டு, உருவினால் தனித் தனியாக வருகிறது. ஒரு குடைக் கம்பி, தொப்பி, கூலிங் கிளாஸ், வெள்ளை துண்டு, பிளாஸ்டிக் அங்கி, கொஞ்சம் பிளாஸ்டிக் கயிறு, பாட்டம் இல்லாத ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் கேன் – இவ்வளவுதான்.
அசை போட்டவை: “ – ”
வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இரண்டிலும் பயணப்பட்ட மு.ரா., இந்தக் கதையை எந்தக் களத்திலும் நடிக்கும் விதமாகவே அமைத்திருக்கிறார். அதற்காக இது முருகபூபதியின் நாடகக் களமாகி விடாது. ஞெகிழி என்று ஆரம்பித்த பின் அதை விளக்குவதற்காக எடுத்துக் கொண்ட நேரம் நாடகப் பகுதியில் பெரும்பான்மையை விழுங்கி விடுகிறது.
கல்லூரியில் நடத்தப் பெறும் விளம்பரப் போட்டிகளில், மாணவர்கள் ஒரு பொருளை அல்லது சினிமாவை நையாண்டியுடன் விளம்பரப்படுத்துவார்கள். இந்நாடகத்தில் ஞெகிழி பற்றிய பகுதி அத்தகையதே!
‘வியாபாரமாயணம்’ – நவீன நாடகம்
சமகாலப் பிரச்சினைகளாக, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறுவது, பன்னாட்டு நிறுவன வணிக நுழைவு, விளைநிலம் விலை நிலமானது என்று எட்டியவரை பேசினாலும்; ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில் பிரளயன் உருவாக்கிய வீதிநாடகத்தில் உள்ள அழுத்தம் இதில் ஏனோ இல்லை.
நாடகத்தில் சொல்லப்பட்ட புனைவு, ஞெகிழி விஷயத்தில் அதிகமாகி விட்டது. இவ்விடத்தில் பார்வையாளன் சமகால வேதனைகளை அறிவால் புரிந்து கொள்ளாமல், வெறுமனே நகைத்து விட்டுச் சென்றால், அது படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் ஏமாற்றமே!
இறுதியாக…
இவை ஒரு புறமிருக்க, இன்றைய சூழலில் எண்ணற்ற மின்திரைக்குள் (தொ.காட்சி, கணிப்பொறி, செல், டேப்லெட்,…) சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறையினருக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகளை முன் நிகழ்த்திக் காட்டுவது மிக மிக அவசியம். இது அவர்கள் சிந்தையில் பற்பல சமூகநலச் சாளரங்களைத் திறந்து விடும்.
இந்த நம்பிக்கையோடுதான், பேரா.சிவசு அவர்களின் ‘மேலும்’ அமைப்பு கல்லூரிகளோடு கை கோர்த்து தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இன்னொருபுறம், பேரா.மு.ரா. அவர்கள், ஒரு யாத்திரிகனைப் போல தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறார். தமிழ் மொழி, நாடு, பண்பாடு, கலை, கலாச்சாரம் என்று நாளும் கவலை கொள்ளும் இவ்விருவருக்கும் தமிழ்ச் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
* * *
இணையத்தில்: “வியாபாரமாயணம்” – நவீன நாடகம்

திருநெல்வேலியில் உள்ள“மேலும்"இலக்கிய அமைப்பும் தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையமும் இணைந்து இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வேடு எழுதுதல் தொடர்பாக நடத்திய பயிற்சிப்பட்டறை

 திருநெல்வேலியில் உள்ள“மேலும்"இலக்கிய அமைப்பும் தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையமும் இணைந்து இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வேடு
எழுதுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை 29.3.14 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருநெல்வேலி,பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையஅரங்கில் நடத்தின.

 திரு.கரிகாலன் அவர்களுக்கு சிவசு சிறப்புச் செய்கிறார்.
 திரு.தமிழவன் அவர்களுக்கு முனைவர் வே.கட்டளை கைலாசம் பாராட்டு
'' மேலும்''சிவசுவின் உரை
 திரு.கரிகாலன் உரை
 முனைவர் பட்ட ஆய்வாளர்கள்
 முனைவர் துரை.சீனிசாமி அவர்களுக்கு முனைவர் ச.மகாதேவன் பாராட்டு

 முனைவர் தமிழவன் உரை