Friday, March 28, 2014

"மேலும்"சிவசு



சில ஆசிரியர்கள் வியக்க வைப்பவர்கள் ,

சில ஆசிரியர்கள் சிந்திக்க வைப்பார்கள் , 

சில ஆசிரியர்கள் மாணவர்களை உயர்த்த நினைப்பார்கள் 

 .என் ஆசிரியர் சிவசு அவர்களை  இந்த மூன்று வகைக்குள்ளும் வைத்துப் பார்க்க முடியும்

 .தூய சவேரியார் கல்லூரியில் 1992முதல் 1998 மாணவனாகப்
பயின்றபோது சிவசுவால் வாசிப்புத் தளத்திற்கு வந்தேன்


 .அப்போது தியாகராஜ நகரில் அவர் புத்தகக் கடை வைத்திருந்தார் .வைரமுத்துவின் தாக்கத்தில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தவனை புதுமைப்பித்தன் ,மௌனி , சி .சு .செல்லப்பா வண்ணநிலவன் ,வண்ணதாசன் ,விக்ரமாதித்யன் ,கலாப்ரியா ,கா .நா .சு .,தமிழவன் என்று படைபாளிகள் பிரவாகத்தை அறிமுகப் படுத்தியவரும் அவரே 

 .கம்பா நதியும் ,ரெயினீஸ் ஐயர் தெருவும் ,கடல்புரத்தில் படைப்பும் படித்ததன் காரணம் அவர்தான் .சி .சு .செல்லப்பா'' எழுத்து ''பத்திரிக்கைகளை சுமந்தபடி கல்லூரி கல்லூரியாக நடந்த கதை சொல்லிருக்கிறார் .வல்லிகண்ணனை அவருடைய நேர்காணலை நூலாகத் தந்திருக்கிறார்

 .
புதுமைப்பித்தன் கதைகளை அவர் நடத்தும் விதம் அலாதியானது .தொடக்க கால கட்டத்தில் பிடித்த எழுத்தாளரின் தாக்கம் இருக்கலாம் ,ஆனால் தனித்துவமான நடை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பார் .நெல்லை மண் சார்ந்த எழுத்தாளர்கள் சிவசு அய்யாவுக்குப் பிடித்தமானவர்கள் .அதிலும் வண்ணதாசன் அய்யா மீது அவருக்கு அதிகப் பிரியம் 

 .புதுமைப்பித்தன் கவிதைகள் குறித்து எம் .பில் ஆய்வு மேற்கொண்டதும் ,வண்ணதாசன் படைப்பிலக்கியங்கள்   குறித்து நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டதும் அவரின் தாக்கத்தில்தான்  

.
அமைப்பியல் ,நவீனத்துவம் ,பின் நவீனத்துவம்,சிக்மெண்ட் பிராய்டு ,சசூர் ,யூங் ,பூக்கோ என்று அவர் அறிமுகப் படித்தியவற்றைத் தேடித்தேடி படித்தது பசுமை நினைவுகள் ...தொல்காப்பியத்தின் அடிப்படையில் இலக்கிய விமர்சனம் செய்ய வேண்டும் என்பார்  

.
மாணவன்தானே என்று குறைத்து மதிப்பிடாமல் அவர்களின் படைப்பு மனத்தை சிவசு அய்யா மதிப்பார் .தமிழவனின்'' ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் ''புதினம் அப்போது எம் ..பாடத் திட்டத்தில் இருந்தது ,அந்த புதினத்தைப் படித்துவிட்டு வகுப்பில் நான் முன் வைத்த விமர்சனங்களுக்கு சினப்படாமல் அவர் வைத்த பதில் அற்புதமானது .புதிய படைப்புகள் வந்த உடன் அவற்றைப் படித்துவிடுவதும்  ,விமர்சன  வினையாற்றுவதும் அவரது அன்றாடப் பணிகள்


. இனிப்பு சதைக்குள்ளே இருந்தாலும் இனிமை ஏதுமற்று இயல்பிழக்காமல்  உள்ளிருக்கும் காசாலட்டுப்   பழவண்டு மாதிரி சிவசு அய்யா எதற்கும் பெருமைப்பட்டுக் கொண்டதில்லை .

சங்க இலக்கியத்தின் உள்ளுறையிலும் இறைச்சிப் பொருளிலும் அவர் காட்டிய புதிய கோணங்கள் அருமையானவை .அவர் நடத்திய தொல்காப்பிய வகுப்புகள் இன்னும் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன 

.
இளமறிவியல் வேதியல் பயின்றபோது பாரதப் பிரதமரிடம் சத்பாவனா தேசிய விருதினை பெற்றபோது வகுப்புக்கு வந்து பாராட்டியது இன்னும் பசுமை நினைவுகளாய் மனதில்  

.
படைப்பாளிகள் ,கல்விப் புலம் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்க அவர் மேற்கொண்ட செயல்திட்டம்தான் படைப்பாளிகளின் படைப்பு  இலக்கியக் கருத்தரங்குகள் .

மாலன் படைப்புலகம் குறித்த கருத்தரங்கினை சேவியர் கல்லூரியில் நடத்தியதும் ,,வண்ணதாசன்  படைப்புலகம் குறித்த கருத்தரங்கினை சதக்கத்துல்லாஹ்  அப்பா  கல்லூரியில் நடத்தியதும்,கலாப்ரியா   படைப்புலகம் குறித்த கருத்தரங்கினை குற்றாலம் பராசக்தி  கல்லூரியில் நடத்தியதும்,அறிஞர் அண்ணா அவர்களின்படைப்புலகம் குறித்த கருத்தரங்கினை திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் நடத்தியதும் , ,தமிழச்சி தங்கபாண்டியன்   படைப்புலகம் குறித்த கருத்தரங்கினை ம .தி .தா .இந்து   கல்லூரியில் நடத்தியதும்,,ஜோ.டி.குருஸ்  படைப்புலகம் குறித்த கருத்தரங்கினை தூத்துக்குடி செய்ன்ட் மேரிஸ்   கல்லூரியில் நடத்தியதும் சிவசு அய்யாவின் வழிகாட்டலில்'' மேலும் ''அமைப்பு நிகழ்த்திய முக்கியமான நிகழ்வுகள்  


.
சில ஆசிரியர்கள் வியக்க வைப்பவர்கள் ,சில ஆசிரியர்கள் இயக்க வைப்பவர்கள்.எங்கள் சிவசு அய்யாவைப் போல .

No comments:

Post a Comment